விடுமுறை நாட்களிலும் தொழிலாளர்களுக்கு நிர்பந்தம் - அதிருப்த்தி

வால்பாறை, பிப். 26:  தேயிலை உற்பத்தியில் சாதனை படைக்கும் இந்தியா 200 மில்லியன் கிலோ தேயிலையை ஒரு வருடத்தில் உற்பத்தி செய்கிறது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக பச்சை தேயிலை உற்பத்தி கணிசமாக உயர்ந்து உள்ளது. இந்நிலையில் தற்காலிக தொழிலாளர்கள் அனைவரும் தொடர்ந்து அதிக நேரம் பணியும் செய்து வருகின்றனர்.

பலர் 2 ஷிப்ட் முறையிலும் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளன்று தேயிலை பறிப்புக் கூலி கிலோவிற்கு ரூ.5 தருவதாக கூறி கட்டாயப்படுத்தி தொழிலாளர்களை தோட்ட நிர்வாகங்கள் பணிக்கு அழைத்துள்ளன.

இதையடுத்து பலர் பணிக்க சென்றுள்ளனர். பலர் பணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் பணிக்கு செல்லாதவர்கள் மீது தோட்ட நிர்வாகங்கள் பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பிரச்னை குறித்து தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும், கொத்தடிமைகள் போல பணியாற்றும் மாற்று மாநில மக்கள் மீதும் கருணை கொள்ளவேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இது குறித்து திமுக கூட்டணி தொழிற்சங்க தலைவர்கள் கூறுகையில், விடுமுறை நாளன்றும் பணிக்க வரவேண்டும் என கூறி தொழிலாளர்களை கட்டாயப்படுத்தினால் தோட்ட நிர்வாகங்களை கண்டித்து போராட்டம் நடத்தப்படும், என்றனர்.

Related Stories: