மாவட்ட பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்

தர்மபுரி, பிப்.21: பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகள் நிலையிலான களப்பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக, பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நாளை (22ம் தேதி) பிற்பகல் 2 மணிக்கு வன்னியர் திருமண மண்டபத்தில் நடக்கிறது. இதில், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. வாக்குச்சாவடிகள் களப்பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ள நிலையில் ஆய்வு செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் களப்பணிகளை மேற்கொள்ளவுள்ள, ஒருங்கிணைக்கவுள்ள நிர்வாகிகள், களப்பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படும். எனவே, பாமக, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து சங்கம் சார்ந்த அமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கல்லூரி மாணவி மாயம்

அதியமான்கோட்டை காவலக்காரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் கவுசிகா (20), அதேபகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் படித்து  வருகிறார். நேற்று முன்தினம், வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற கவுசிகா  மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  இதுகுறித்து அதியமான்கோட்டை போலீசில் முருகன் புகார் அளித்தார்.  இதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

 

ஆடு திருட்டு

பாலக்கோடு மகேந்திரமங்கலம் சீங்கேரி பகுதியை சேர்ந்தவர் முத்தாயி (55). இவர் ஆடு விற்பனை செய்வதற்காக உறவினர் சக்திவேல் விட்டுக்கு வந்தார். அவரது வீட்டின் அருகே ஆடு கட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கட்டி வைத்த ஆட்டை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.  இதையடுத்து முத்தாயி அளித்த புகாரின் பேரில், பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி தற்கொலை

கோட்டப்பட்டி அடுத்த பெரியப்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா.  இவரது மகள் அனு(13), 8ம் வகுப்பு படித்து வந்தார். இளையராஜா மனைவியுடன்  திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இதனால், அனு  பெரியப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் அனுயை பாட்டி திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்தவர்  நேற்று முன்தினம் வீட்டில் பாட்டியின் சேலையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து  கொண்டார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

இளம்பெண் தற்கொலை

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த கொங்கலாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி அமுதா (31). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில், முருகன் கடந்த  ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த அமுதா வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: