வாலாஜாபாத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தேர்தல் பணிமனையை திமுக வேட்பாளர் க.சுந்தர் திறந்து வைத்தார்

வாலாஜாபாத்: உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.சுந்தர், உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட பேரூர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள், இதன் மூலம் பயனடைந்த பயனாளிகள் மட்டுமின்றி தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள அனைத்தையும் நிறை வேற்றிட மீண்டும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கவேண்டும் என தொகுதி முழுவதும் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று வாலாஜாபாத் ரவுண்டானா பகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் க.சுந்தர் கலந்துகொண்டு, தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அங்கு திரண்டிருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள ஆக்கப்பூர்வ திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறி, உதய சூரியனுக்கு வாக்கு சேகரிக்க வலியுறுத்தினார்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றவேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் தேவேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய் காந்தி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுகுமாரன் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: