ரஜினிய சூப்பர் ஸ்டார் ஆக்கினாராம்… மீனாட்சி, சுந்தரேஸ்வரர் போல சுந்தர்.சி, குஷ்பு இருக்காங்களாம்! அடிச்சு விட்ட செல்லூர் ராஜூ

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: தமிழகத்தில் ஒரு நடிகைக்கு கோயில் கட்டியது என்றால் அது குஷ்புவிற்குத்தான். அவரும் சுந்தர்சியும் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் அமர்ந்திருந்திருப்பது போல அமர்ந்துள்ளனர். சுந்தரேஸ்வராக காட்சியளிக்க சுந்தர்.சி மதுரைக்கு வந்துள்ளார். சிவபெருமானின் மறுபெயர் அழகு சுந்தரர். அவர் வெற்றி இந்த மண்ணுக்கு கிடைக்கும் வெற்றி, நாம் கும்பிடும் சாமிக்கு கிடைக்கும் வெற்றி. சுந்தர்.சி ஒன்றுபட்ட மதுரை மாவட்டமாக இருந்த பழநியில் பிறந்துள்ளார்.

ஆக அவர் மதுரை மண்ணுக்கு சொந்தக்காரர். அனைவரிடமும் நல்லமுறையில் பழகுகிறார். மதுரைக்காரன் பணத்தை எதிர்பார்க்க மாட்டான், பாசத்தைதான் எதிர்பார்ப்பான். குஷ்பு எவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறார்? ரஜினியை இன்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்ல அவருடைய பணிவு, நடந்துகொள்ளும் விதம், எல்லாரோடும் பழகும் பாங்கு தான் காரணம். அது தான் நட்சத்திரமாக நிற்கிறது. எவ்வளவு வயது ஆனாலும், ஏராளமான படங்களுக்கு வெற்றியைத் தந்தாலும் தலைக்கனம் இல்லாத ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரஜினியை வைத்து திரைப்படங்களை இயக்கி அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் சுந்தர்.சி. இவ்வாறு அவர் பேசினார்.

* நாகர்கோவிலில் 15ம் தேதி பிரதமர் மோடி ரோடு ஷோ: நயினார் தகவல்
நாகர்கோவிலில் பாரதிய ஜனதா அலுவலகத்தில் சக்தி கேந்திரா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் ​எந்த வாக்குச்சாவடியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பாஜவுக்கு பெற்றுத் தருகிறீர்களோ, அந்தப் பூத் பொறுப்பாளருக்கு தனிப்பட்ட முறையில் நான் ஒரு பவுன் தங்கத்தை பரிசாக வழங்குவேன். பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து எம்ஜிஆர் சிலை சந்திப்பு வரை ரோடு ஷோ நடத்தப்படுகிறது. இதற்காக 15ம்தேதி பிரதமர் வருகிறார். இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* விஜய்யால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது
நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விஜய் தென் மாவட்ட வருகையால் மாற்றம் வருமா? என்கிறீர்கள். அவரால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. வேறு யார் வந்தாலும் எந்த மாற்றமும் வராது. எடப்பாடி பழனிசாமி, வெண்டிலேட்டர்களில் இருந்த கட்சிகளை கூட்டணி வைத்து அதிமுக தான் காப்பாற்றியது என கூறி உள்ளதை பற்றி நான் கருத்து சொல்லவில்லை. அவர் பாரதிய ஜனதாவை கூறி இருக்க மாட்டார். எங்களை பொறுத்தவரை நாங்கள் வலுவாக உள்ளோம்’’ என்றார்.

Related Stories: