சென்னை: கடலோரத்தில் காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, பல இடங்களில் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்துள்ளது. குறிப்பாக காரைக்கால், ஜெயங்கொண்டம், புள்ளம்பாடி, விழுப்புரம், கடலூர், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது.
வெப்ப நிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை என்றாலும், ஒரு சில இடங்களில் இயல்பில் இருந்து 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. பிற இடங்களில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதன் காரணமாக கரூரில் நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், தெலங்கானா மற்றும் அதை ஒட்டிய பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரையில், ராயலசீமா- தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மணிக்கு 30 கிமீ வேகம் முதல் 40 கிமீ வேகத்துடன் கூடிய கனமழை பெய்தது. மற்றும் விழுப்புரம், காரைக்கால், கடலூர், சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 10ம் தேதி வரையில் மேற்கண்டபடி இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். 11 மற்றும் 12ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவும். வெப்பநிலையை பொருத்தவரையில் 10ம் தேதி வரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். வெப்பநிலை இயல்பைஒட்டியே இருக்கும்.
