நல்லம்பள்ளியில் பெண் குழந்தை மர்மச்சாவு

நல்லம்பள்ளி,பிப்.19: நல்லம்பள்ளி அடுத்த நூலஹள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அந்திஏரியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து(32). இவரது மனைவி சாலம்மாள்(23). இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சாலம்மாளுக்கு கடந்த 28 நாட்களுக்கு முன், மீண்டும் 3வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், நேற்று காலை குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென்று அலறல் சத்தம் கேட்டு சாலம்மாள் வந்து பார்த்தபோது குழந்தை வாந்தி எடுத்தபடி கிடந்தது. உடனடியாக குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை எவ்வாறு இறந்தது என்பது, பரிசோதனை முடிவில் தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: