பாப்பிரெட்டிப்பட்டி, மார்ச் 31: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் சப்ளையை தடுக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட செம்மனஹள்ளி பகுதியில், நேற்று பறக்கும் படை அதிகாரி நித்யா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூக்கனூர் பகுதியில் இருந்து தர்மபுரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த ஹோண்டா சைன் பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். இதில், பைக்கில் வந்த தர்மபுரி ராஜாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மூர்த்தி(45) என்பவர் 51,700 ரூபாய் எடுத்துச் சென்றது தெரியவந்தது.
உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பின்னர், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தன், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்ணன், பார்வதி, தனி தாசில்தார் செந்தில் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அப்பணம் மூடி முத்திரையிடப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
