திருச்சி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம்

 

திருச்சி, மார்ச் 31: திருச்சியில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சரவணன் அறிவுறுத்தலின் படி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தல் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு: ரங்கநாதசுவாமி கோவில் ராஜகோபுரம் அருகில் 100 சதவீதம் வாக்குப்பதிவை மக்களிடம் வலியுறுத்தி மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். தூய்மைப்பணியாளா்கள் மற்றும் மக்கள் நலப்பணியாளா்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கையெழுத்திட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள கோ.அபிஷேகபுரம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் வண்ணக்கோலங்கள் வரைந்து, உறுதிமொழி ஏற்று, ஆட்டோக்களில் ஒட்டு வில்லைகள் ஒட்டி தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வெக்காளியம்மன் கோவிலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி வாக்காளர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள எஸ்ஐர்சி கல்லூரி மாணவியா்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தனியார் நிறுவனத்தில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து உழியர்கள் மற்றும் வாக்காளர்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் கூத்தைப்பார் பேரூராட்சியில் வாக்காளர்களுக்கு பேரூராட்சி பணியாளா்களால் விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. லால்குடி சட்டமன்ற தொகுதியில் பூவாளூரில் பேரூராட்சி அலுவலகம் முன்பு தோ்தல் விழிப்புணா்வு பேரூராட்சி செயல் அலுவலா் தலைமையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

Related Stories: