புதுக்கோட்டை , மார்ச் 31: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேதி கடந்த 15ந் தேதி இந்திய தேர்தல் ஆணையம் மூலம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று (30ந் தேதி) முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ந் தேதி வரையில் நடைபெறும் நிலையில் பின்னர் 7ந் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்று 9ந் தேதி மனுவினை திரும்ப பெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த மாதம் 23ந் தேதி தேர்தல் நடைபெற்று மே மாதம் 4ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கட்சிகளின் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று துவங்கிய வேட்பு மனு தாக்கலில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான பிரகாஷிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சுயேச்சை வேட்பாளராக கே.கைலாசகுமார் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதோபோல அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் தோர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான அபிநயாவிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முத்துலட்சுமி செல்வரத்தினம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கந்தர்வகோட்டை தனி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவியிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நதியா தமிழரசன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். திருமயம் சட்டமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமாலிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லட்சுமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மற்றும் அதே தொகுதியில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த அரசமலை சின்னையா என்ற மாற்றுத்திறனாளி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். திருமயம் தொகுதியில் நேற்று 2பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர்.
விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலுரும், இலுப்பூர் கோட்டாட்சியருமான கோகுல் சிங்கிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கே.சத்திய லட்சுமி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆலங்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ேஷாபாவிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜாராம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
