குளித்தலை, பிப்.17: குளித்தலை அருகே சத்தியமங்கலம் கிராமத்தில் வசித்து வந்த சாரதாம்பாள் என்பவர் 100 நாள் வேலை திட்ட பயனாளி ஆவார். இவர் இறந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ளது. அவர் குளித்தலை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு தொடங்கி வரவு, செலவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வங்கி கணக்கில் இன்சூரன்ஸ் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகையை 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் வழங்காமல் வங்கி நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. உடனடியாக அந்த குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க கோரி கடந்த 2.12.2020 அன்று போராட்டம் என அறிவிக்கப்பட்டு வங்கி நிர்வாகம் ஒரு மாத காலத்திற்குள் உரிய காப்பீட்டு தொகையை தருகிறோம் என்று ஒப்புக்கொண்டது. ஆனால், இரண்டு மாதம் ஆகியும் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்து நேற்று காலை 10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., ஒன்றிய குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் என அறிவித்திருந்தனர்.