கரூர், பிப்.17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தும் வகையில் கரூர் தாலுகா அலுவலகம் முன் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போக்குவரத்து துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர், அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் ஒன்று திரண்டு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கருர் தாலுகா அலுவலகம் முன் இந்த பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. கரூர் எம்எல்ஏ அலுவலகம், தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள நிலையில், எம்எல்ஏ அலுவலகம் உள்ள சாலையின் இருபுறமும் போலீசார் தடுப்புகளை வைத்து பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இந்த பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.