நாகர்கோவில், மார்ச் 24: கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பிரியங்கா பாசு இங்டி, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச் சாவடிகளில் உறுதி செய்யப்பட வேண்டிய குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிதாங்கோடு, விலவூர், கோதநல்லூர், குமாரபுரம் ஆகிய பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 50 வாக்குசாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக வாக்காளர்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகள், மின்சாரம் மற்றும் காற்றோட்டம், வாக்குச்சாவடி அறைகளில் போதிய வெளிச்சம் மற்றும் மின்விசிறி வசதிகள், கழிப்பறை வசதி ஆண், பெண் இருபாலருக்கும் தனித் தனியான சுகாதாரமான கழிப்பறை வசதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எளிதாக வந்து செல்ல நிலையான சாய்வுதளங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி ஜனநாயகக் கடமையாற்ற அனைத்துத் தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.
