வெள்ளியங்கிரி மலையேற்றத்தின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழப்பு!!

கோவை: வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பூண்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்குள்ள 7வது மலையில் சுயம்புலிங்கம் கோவிலுள்ளது. சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்கின்றனர்.

தமிழ்நாட்டிலேயே மிகவும் கடினமான மலைப்பாதையை கொண்டுள்ள மலை இது. 6 கி.மீ பயண தூரத்தில் கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப்பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலையின் உச்சியை அடையலாம். இந்த ஏழு மலைகளில் 7ஆவது மலை தான் மிக கடினமான பயணத்தை கொண்டதாக இருக்கும். அதன்படி இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மலையேற்றத்தின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வெள்ளியங்கிரி மலைக்குச் சென்ற கெம்பட்டியைச் சேர்ந்த ஹரிதாஸ் (48) என்ற பக்தர், முதலாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை டோலியில் கட்டி கரடுமுரடான மலைப்பாதை வழியாக கீழே கொண்டு வர வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நடப்பு ஆண்டில் மலையேற்றத்தின்போது இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: