கோவை, மார்ச் 4: கோவை மாவட்டத்தில் பிளஸ்-1 அரியர் மொழிப்பாடத் தேர்வினை 92 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் நடப்பாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டுகளில் பிளஸ்1 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள், தேர்ச்சி அடையும் வகையில் அவர்களுக்கு அரியர் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, பிளஸ்-1 மாணவர்களுக்கான அரியர் தேர்வு நேற்று துவங்கியது. இதில், தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வினை கோவை மாவட்டத்தில் 49 மையங்களின் மூலம் மொத்தம் 166 மாணவர்கள் எழுத இருந்தனர். இந்நிலையில், தேர்வினை 92 மாணவர்கள் எழுதினர். 74 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தொடர்ந்து, வரும் 6ம் தேதி ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. பிளஸ்1 மாணவர்களுக்கான அரியர் தேர்வுகள் வரும் 27-ம் தேதி வரை நடக்கிறது.
