மதுரை, மார்ச் 4: மதுரை அரசு மருத்துவமனையில், 14 வயதிற்கு மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கென கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடும் பணிகள் நேற்று துவங்கியது. பெண்களை புற்றுநோய் உண்டாக்கும் ஹெச்பிவி எனும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி (ஹெச்பிவி) வழங்கப்படுகிறது. இதன்படி மதுரை அரசு மருத்துவமனையில், இந்த தடுப்பூசி போடும் பணியை நேற்று டீன் அருள் சுந்தரேஸ்குமார் துவக்கி வைத்தார்.
மருத்துவ கண்காணிப்பாளர் கார்த்திகேயன், குழந்தைகள் நலத்துறை தலைவர் நந்தினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் 14 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக தொடர்ந்து வழங்கப்படுகிறது. மேலும், மலக்குடல் புற்றுநோய் பாதிப்பிலிருந்து தவிர்க்க ஆண்களும் இவ்வகை தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய், ஆசன வாய், தொண்டை மற்றும் பிறப்புறுப்பு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்பு தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
