காரமடை, மார்ச் 4: கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாத சுவாமி கோயிலில் மாசிமக தேர்த்திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரங்கனை தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 20க்கும் மேற்பட்ட பக்தர்களிடம் செல்போன்கள் பறிக்கப்பட்டுள்ளதாக காரமடை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், கோயில் வளாகத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
