குளித்தலை, பிப்.10: குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வதியம் கிராம மக்கள் சார்பில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு மயானத்திற்கு இடம் ஒதுக்க கோரி கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வதியம் ஊராட்சி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் ஒருவர் இறந்து விட்டால் அவர்களுடைய சடலத்தை காவிரி ஆற்றுக்கு எடுத்துச்சென்று எரித்தும், புதைத்து வருவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. தற்போது பக்கத்தில் நில உரிமையாளர் மயானம் வைத்துள்ள இடம் அவர்களது இடம் என்று சொல்லி இடத்தை சர்வே செய்து அளவுகள் போட்டுவிட்டார். ஆகையால் எங்களுக்கு மயானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது எங்கள் ஊரில் எவரேனும் இறந்தால் சடலத்தை மயானத்திற்கு எடுத்துச் சென்றால் வைக்க கூட இடமில்லை. இது சம்பந்தமாக ஊர் பொதுமக்கள் சார்பில் கடந்தாண்டு ஜனவரியில் மனு கொடுக்கப்பட்டு அந்த மனுவில் மயானத்திற்கு இடம் தேர்வு செய்து கட்டிடம் கட்டித்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.