காய்ச்சல் பாதிப்பு காரணமாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காய்ச்சல் பாதிப்பு காரணமாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 22ம் தேதி காய்ச்சல் காரணமாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் மாலையே அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு காய்ச்சல் பாதிப்பு முழுமையாகக் குறையாததால், நேற்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: