சென்னை: அப்போலோ மருத்துவமனை ஜூம் ஸ்கோப் தொழில்நுட்ப உதவியுடன் குறைந்தளவு ஊடுருவும் எண்டோஸ்கோபிக் சிகிச்சை மூலம் 15 செ.மீ. பெருங்குடல் கட்டியை வெற்றிகரமாக அகற்றி உள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 80 வயது பெண்ணுக்கு சிக்மாய்டு பெருங்குடலில் பக்கவாட்டில் பரவியிருந்த 15 செ.மீ அளவு கட்டியை (அடினோமா பாலிப்) ஜூம் ஸ்கோப் தொழில்நுட்ப உதவியுடன் குறைந்தளவு ஊடுருவும் எண்டோஸ்கோபிக் சிகிச்சை மூலம் 15 செ.மீ. பெருங்குடல் கட்டியை அப்போலோ மருத்துவமனை வெற்றிகரமாக அகற்றி உள்ளது.
இதுதொடர்பான நிகழ்ச்சி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்தது. அப்போது டாக்டர் ஆர்.ரவி கூறியதாவது: 80 வயது பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும்போது அவரின் மலக்குடலில் இருந்து ரத்தப்போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற உபாதை இருந்தது. பரிசோதனையில் அவரின் சிக்மாய்டு பெருங்குடல் பக்கவாட்டில் பரவக்கூடிய வகையில் பெரிய அடினோமா பாலிப் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாலிப் வகையானது புற்றுநோயாக மாறுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கட்டியின் அளவு மற்றும் அவை இருக்கும் இடம் கவனத்தில் கொண்டு, இவருக்கு மேம்பட்ட எண்டோஸ்கோபிக் நிபுணத்துவம் மற்றும் துல்லியமான சிகிச்சை தேவையாக இருந்தது. இந்நிலையில் மருத்துவக்குழு நோயாளிக்கு எண்டோஸ்கோபிக் சப்மியூகோசல் டிசெக்ஷன் (Endoscopic Submucosal Dissection – ESD) என்ற நவீன மருத்துவ சிகிச்சை முறையைத் தேர்வு செய்தது. இது இரைப்பை – குடல் பாதையில் இருக்கும் ஆரம்ப கட்ட கட்டிகளை எண்டோஸ்கோப் கருவி மூலம் அகற்றும் நவீன சிகிச்சை முறையாகும்.
இதன் மூலம் நோயாளிக்கு 15 செ.மீ. அளவிலான கட்டி இருந்த நிலையில் அதை என்-ப்ளாக் முறையில் முழு கட்டியும் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. ஜூம் ஸ்கோப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சை, அதிகப்படியான பெரிதாக்கத்தையும் மற்றும் திசு அடுக்குகளின் தெளிவான காட்சியை வழங்கியது. இதன் மூலம் மருத்துவ நிபுணர்கள் கட்டியின் எல்லைகளைத் துல்லியமாக கண்டறிந்து, சப்மியூகோசல் அடுக்குகளை மிக நுணுக்கமாக பிரித்து அகற்ற முடிந்தது.
இதனால் உறுப்பு சேதமின்றி, கட்டி முழுமையாக அகற்றப்பட்டது. இந்த செயல்முறை சுமார் ஆறு மணி நேரம் நீடித்தது. இந்த மேம்பட்ட எண்டோஸ்கோபிக் முறையைத் தேர்வு செய்ததன் மூலம், பொதுவாக குடலின் ஒரு பகுதியை அகற்ற வேண்டிய பெரிய அளவிலான கொலோரெக்டல் அறுவை சிகிச்சையை மருத்துவக்குழு திறம்பட தவிர்த்தது. நோயாளி நீண்ட காலம் படுக்கையில் இல்லாமல் விரைவில் மீட்பு நிலைக்கு திரும்பவும் இந்த நவீன சிகிச்சை உதவியது. இவ்வாறு அவர் கூறினார்.
