ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய கர்நாடகா பாஜ எம்.எல்.ஏ கைது: லோக்ஆயுக்தா அதிரடி

பெங்களூரு: கர்நாடகாவில் லோக்ஆயுக்தா போலீசார், லஞ்சத்தைத் தடுக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கதக் மாவட்டம் ஷிரகட்டி தொகுதி பாஜ எம்.எல்.ஏ சந்துரு லமானி, சிறு நீர்ப்பாசனத்துறை கட்டுமான ஒப்பந்ததாரர் விஜய் பூஜார் என்பவரிடம் ரூ.11 லட்சத்தை லஞ்சமாக கேட்டுள்ளார். சங்கடல் கிராமத்தில் சாலையோர தடுப்புச்சுவர் கட்டுவதற்கான செலவு சுமார் ரூ.1 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணி தொடர்பாக 1% கமிஷன் கேட்டதால் ஒப்பந்ததாரர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக அவர் லோக்ஆயுக்தாவிடம் புகார் அளிக்க, லோக்ஆயுக்தா போலீசாரின் அறிவுறுத்தலின்படி, ரூ.5 லட்சத்தை எம்.எல்.ஏ சந்துரு லமானியிடம் ஒப்பந்ததாரர் வழங்கினார். அப்போது, எம்.எல்.ஏ சந்துரு லமானியை லோக்ஆயுக்தா அதிகாரிகள் கைது செய்தனர்.

எம்.எல்.ஏவின் உதவியாளர்களான மஞ்சுநாத் வால்மீகி மற்றும் குரு நாயக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து, எம்.எல்.ஏ டாக்டர் சந்துரு லமானிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் லட்சுமேஷ்வர நகரில் உள்ள பாலாஜி மருத்துவமனையிலும் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை நடத்தினர். லோக்ஆயுக்தா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: