லண்டன்: எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரிட்டன் அரசர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதற்காக கைதான தொழிலதிபர் ஜெப்ரீ எப்ஸ்டீன் கடந்த 2019ல் மர்மான முறையில் சிறையில் மரணமடைந்தார். எப்ஸ்டீனுடன் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் உரையாடிய இ-மெயில்கள், பகிர்ந்த வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜனவரியில் 35 லட்சம் பக்கங்களை கொண்ட எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது. அந்த கோப்புகளில் உள்ள விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் தம்பியான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்ட்சருக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியானது.அரச மாளிகையில் இளம் பெண் ஒருவருடன் ஆண்ட்ரூ ஆபாசமாக நடந்து கொள்ளும் படங்கள் வெளியானது. ஆண்ட்ரூவுக்காக எப்ஸ்டீனால் இங்கிலாந்துக்கு ஒரு பெண் கடத்தப்பட்டார் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 10 வருடங்களுக்கு முன் ஆண்ட்ரூ பிரிட்டனின் வர்த்தக தூதரக இருந்தார். அப்போது, எப்ஸ்டீனிடம் அரசின் ரகசிய ஆவணங்களை ஆண்ட்ரூ வழங்கியதாக சந்தேகிப்பதாக தேம்ஸ் வேலி போலீசார் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.
ஆனால்,இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த ஆண்ட்ரூ ஜெப்ரீ எப்ஸ்டீனுடன் பழகியதற்காக தான் வருந்துவதாக கூறியிருந்தார். இந்த நிலையில்,நேற்று காலை கிழக்கு பிரிட்டனின் நார்போல்க் அருகே உள்ள சேன்ரிங்ஹாம் பங்களாவில் ஆண்ட்ரூவை தேம்ஸ் வேலி போலீசார் கைது செய்தனர். பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான பல கோடி ஆவணங்களின் அடிப்படையில், ஆண்ட்ரூ மீது 2 முக்கியக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடனான தொடர்புகள் குறித்த 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு, அவர் நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு எதிரான விசாரணைகள் தொடரும் என இங்கிலாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
