ஈரோடு, பிப். 19: சர்வதேச கபடி போட்டியில் முதல் இடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஈரோடு மாவட்ட அரசு பள்ளி மாணவியை முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி வாழ்த்தினார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.செம்புளிச்சாம்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருவபவர் ஸ்ரீ ரூபிணி. இவர், நேபாள நாட்டில் கடந்த 29ம் தேதி முதல் 2ம் தேதி வரை நடந்த சர்வதேச கபடி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.
இதில், இந்தியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிக்காட்டினர். இதில், அரசு பள்ளி மாணவியான ஸ்ரீரூபிணி முதலிடம் பிடித்து நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில், நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவி ஸ்ரீரூபிணியை ஈரோடு அரசு மகளிர் மாதிரி பள்ளியில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி பாராட்டி வாழ்த்தினார். நிகழ்வில், செம்புளிச்சாம்பாளையம் பள்ளி தலைமையாசிரியர் திம்மராயன், உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
