ஈரோடு,பிப்.13: தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று தொடர்ந்து 9வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு, காளை மாட்டு சிலை அருகில் நடைபெற்ற இந்த தர்ணாவுக்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சத்துணவு மையங்களில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
அரசுத் துறைகளில் பணி மூப்பு அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.6,750 அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண் சத்துணவு ஊழியர்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
