கோபி,பிப்.10: கோபி அருகே உள்ள சலங்கபாளையத்தில் குடியிருப்பு பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பன்றி பண்ணைக்கு பேரூராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். சலங்க பாளையம் பேரூராட்சியில் 12வது வார்டுக்குட்பட்ட ஈஐடி பிரிவு ஓம் சக்தி நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் உரிய அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படுத்தும் வகையில் பூபால குமார் என்பவர் பன்றி பண்ணை அமைத்து 30க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார்.
இதனால் சுகாதார கேடு ஏற்படுவதாகவும், பன்றிகளால் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு ஆபத்து இருப்பதாகவும் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து சலங்க பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகலா மற்றும் சுகாதார அலுவலர் ஜீவானந்தம் ஆகியோர் பலமுறை எச்சரித்தும், பண்ணையை அகற்ற மறுத்த நிலையில், நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள்,இன்ஸ்பெக்டர் ஆகியோர் பன்றி பண்ணையில் இருந்த பன்றிகளை அப்புறப்படுத்தி, பண்ணையை பூட்டி சீல் வைத்தனர்.
