மும்பை: உலகக் கோப்பை டி20 போட்டியில் நேற்று, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. உலகக் கோப்பை டி20 15வது போட்டி, மும்பையில் நேற்று நடந்தது. அதில் வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர்கள் ஷாய் ஹோப் ரன் எடுக்காமலும், பிராண்டன் கிங் 1 ரன்னிலும் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து பரிதவித்தனர். அடுத்து வந்த ஷிம்ரொன் ஹெட்மயர் 12 பந்துகளில் 23, ரோஸ்டன் சேஸ் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
பின் வந்த ஷெர்பேன் ரூதர்போர்ட் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 42 பந்துகளில் 7 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் குவித்து அணிக்கு வலுவூட்டினார். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 2, ஜேமி ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 197 ரன் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 19 ஓவர் முடிவில் 166 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சாம் கரன் 43 ரன்னுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன் வித்தியாசத்தில் வென்றது.
