காஞ்சிபுரம், பிப்.10: காஞ்சிபுரத்தில், காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள், மாநில சங்கம் மற்றும் தமிழ்நாடு வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், தமிழ்நாடு கிராம உதவியாளருக்கு நான்காம் நிலை இணையான காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பாஸ்கரன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட இணைச் செயலாளர் எட்டியப்பன், விஜயபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் உதயகுமார்
வரவேற்று பேசினார்.
இதில் மாநில பொதுச்செயலாளர் முருகன், மாநில பிரச்சார அணி செயலாளர் முனியன், மாநில துணை செயலாளர் நாராயணன், மாநில செயலாளர் மகேந்திர பூபதி, முன்னாள் மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் மணிமேகலை, மகளிரணி துணை தலைவர் அம்பிகா, துணை தலைவர் ஜெயந்தி, மாவட்ட பொருளாளர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாததால் 200க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுதது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை, காஞ்சிபுரம் போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
