குன்றத்தூர் அருகே திருமணம் செய்வதாக கூறி இளம் பெண்ணுடன் உல்லாசம் ரூ.40 லட்சம் ஏமாற்றியவர் கைது

குன்றத்தூர், மார்ச் 29: குன்றத்தூர் அருகே இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டி, பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நதியா(31), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த சென்னை, கொடுங்கையூர், காந்தி தெருவை சேர்ந்த விஷ்வா(37) என்பவருடன் நதியாவிற்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

ஏற்கனவே கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்த நதியாவிடம், தான் உன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி, விஷ்வா அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதனை நதியாவிற்கு தெரியாமல் விஷ்வா தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். விஷ்வாவின் காதலை உண்மை என்று நம்பிய நதியா, அவர் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் செல்லத் தொடங்கினார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஷ்வா, பல்வேறு வங்கிகளில் இருந்து ரூபாய் 40 லட்சம் வரை லோன் வாங்கித் தருமாறு நதியாவிடம் கேட்டுள்ளார். அவர் சொன்னவாறு நதியாவும் லோன் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பிறகு விஷ்வா, நதியாவுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த நதியா, இதுகுறித்து விஷ்வாடம் கேள்வி கேட்டார்.

அத்துடன் தன்னிடம் வாங்கிய 40 லட்ச ரூபாய் பணத்தையும் திருப்பித் தருமாறு கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஷ்வா, நாம் இருவரும் தனியாக இருந்தபோது எடுத்த அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டத் தொடங்கினார். இதனால் செய்வதறியாது தவித்த நதியா, இதுகுறித்து பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விஷ்வா மீது புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, விஷ்வா, நதியாவை ஏமாற்றி பணம் பறித்து, ஆபாச வீடியோக்களை வைத்து மிரட்டியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே பதுங்கியிருந்த விஷ்வாவை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: