காஞ்சிபுரம், மார்ச் 28: பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தின், 6ம் நாளான நேற்று ஏகாம்பரநாதர் ஏலவார் குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஏகாம்பரநாதருக்கு ரோஸ் நிறபட்டு உடுத்தி, ஏலவார் குழலி அம்மனுக்கு பட்டு உடுத்தி மல்லிகைப் பூ, மனோரஞ்சித பூ, செண்பகப் பூ, ரோஜா பூ உள்ளிட்ட பஞ்சவர்ண பூ மாலைகள் சூட்டி திருவாபரணங்கள் அணிவித்து சப்பரத்தில் எழுந்தருள செய்து நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா நடைபெற்றது.
6ம் நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக சிவபெருமானை பாடி தொண்டு புரிந்த 63 நாயன்மார்களையும், மலர் மாலைகளால் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வர ஏலவார் குழலி அம்மனுடன் ஏகாந்தமாய் ஏகாம்பரநாதர் சுவாமி ஏராளமான பக்தர்கள் கண்டுகளிக்கும் வகையில் திருவீதி உலா வந்தார். நான்கு ராஜ வீதிகளில் உலா வந்த ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்மனை வழியெங்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
