கிங்டோவோ: சீனாவின் கிங்டாவோ நகரில் 6வது ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. நேற்றைய காலிறுதி ஆட்டத்தில் உலகின் 42வது இடத்தில் உள்ள இந்தியாவின் தன்வி சர்மா, முதல் ஒற்றையர் பிரிவில் சீனாவின் காவ் பாங்ஜியிடம் 21-9, 21-9 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி ஆகியோர், உலகின் 4வது இடத்தில் உள்ள சீன ஜோடியான ஜியா யிபான், ஜாங் ஷுக்சியனிடம் கடுமையாக போராடி தோல்வியடைந்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரக்ஷிதா, சீனாவின் சூ வென்ஜிங்குடன் முதல் செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினாலும் அடுத்தடுத்த செட்டில் 15-21, 17-21 என்ற கணக்கில் வீழ்ந்தார். உலக தரவரிசையில் 25வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 74வது இடத்தில் உள்ள தென்கொரியாவின் யூ டே பின்னுக்கு எதிராக 84 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 18-21, 21-14, 26-24 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இரட்டையர் ஜோடியான இந்தியாவின் சிராக் ஷெட்டி, ஹரிஹரன் அம்சகருணன் 21-11, 21-13 என்ற கணக்கில் தென் கொரியாவின் சாங் ஹியூன் சோ, கிம் வான் ஹோவிடம் தோல்வியடைந்தது. முன்னாள் உலக நம்பர் 1 இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சோய் ஜிஹூனை 21-15, 21-16 என்ற கணக்கில் தோற்கடித்து இந்தியாவின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.
ஆனால் இரண்டாவது இரட்டையர் போட்டியில் இந்திய ஜோடி பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய், சாய் பிரதீக்கை 21-11, 21-16 என்ற கணக்கில் சீனாவின் ஜின் யோங், கி டோங் ஜூவி ஜோடி வீழ்த்தி ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் வெளியேற்றத்தை உறுதி செய்தது.
