மயாமி: மயாமி ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை கோகா காஃப், சக அமெரிக்க வீராங்கனை அலிசியா பார்க்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மயாமி நகரில் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீராங்கனை கோகோ காஃப் (22), சக அமெரிக்க வீராங்கனை அலிசியா பார்க்ஸ் (25) மோதினர். முதல் செட்டில் சிறப்பாக ஆடிய பார்க்ஸ், 6-3 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.
அதன் பின் சுதாரித்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய காஃப், அடுத்த இரு செட்களையும் 6-0, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அநாயாசமாக கைப்பற்றினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய காஃப் காலிறுதிக்கு முந்தைய 4வது சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் ரொமானியா வீராங்கனைகள் ஸொரானா கிறிஸ்டீ, எலிஸெ மெர்டென்ஸ் மோதினர். இப்போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கிறிஸ்டீ, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றிவாகை சூடி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் காஃப், ஸொரானா கிறிஸ்டீ உடன் மோதவுள்ளார்.
