ஆசிய சாம்பியன்ஷிப் பிஸ்டல் பிரிவு: சுருச்சி – சாம்ராட் இணைக்கு வெள்ளி

புதுடெல்லி: ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் கலப்பு குழு போட்டியில் நேற்று, இந்திய வீராங்கனை சுருச்சி சிங்-சாம்ராட் ராணா இணை, அபாரமாக செயல்பட்டு வெள்ளிப்பதக்கம் வென்றது. டெல்லியில் ஆசிய பிஸ்டல் / ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று முன்தினம் நடந்த ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை இஷா சிங் மிக சிறப்பாக செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றார் இந்நிலையில் நேற்று நடந்த கலப்பு குழு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை சுருச்சி சிங், இந்திய வீரர் சாம்ராட் ராணா அடங்கிய இணை, அபாரமாக செயல்பட்டு 479.6 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. உஸ்பெகிஸ்தானை சேர்ந்த நிகினா செய்குலோவா, முகம்மது கமலோவ் இணை, 481.3 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.

இந்த போட்டியில் சீன தைபே அணியினர், 412.2 புள்ளிகளுடன் 3ம் இடம் பிடித்து வெண்கலம் வென்றனர். ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை, இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர். நேற்றைய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுருச்சி சிங், கடந்தாண்டு நடந்த ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை போட்டியில் 4 தங்கப்பதக்கங்கள் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: