மதுரை, பிப். 5: தென் தமிழகத்தின் கிராமப்புற மக்களுக்காக, நவீன வசதிகள் கொண்ட முதல் நடமாடும் கண் மருத்துவ சேவையை, மதுரை ஆதி கண் மருத்துவமனை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மருத்துவமனையின் 7வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பொதுமக்களுக்காக இலவச கண் பரிசோதனை மற்றும் கண் மருத்துவர் உடன் ஆலோசனை முகாமையும் ஆதி கண் மருத்துவமனை நடத்துகிறது.
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, ‘நடமாடும் கண் மருத்துவ கிளினிக்’ வாகனத்தின் சேவையைத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தென் தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான ஆதி கண் மருத்துவமனை,இந்த நடமாடும் கண் மருத்துவ சேவையை அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடக்க விழாவில் மதுரை மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் எல்.அருள் சுந்தரேஷ் குமார், நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆதி கண் மருத்துவமனையின் தலைவர் திருமலைக்குமார் சிறப்புரை ஆற்றினார்.
