நாகப்பட்டினம், ஜன. 29: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத்தலைவர் ராஜு தலைமை வகித்தார். வட்ட இணை செயலாளர் மணியன் வரவேற்றார். வட்ட செயலாளர் மாரிமுத்து கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் வாசு, மாவட்ட துணைத் தலைவர் நடராஜன், இணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட தலைவர் வேலாயுதம் ஆகியோர் பேசினர்.
70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். கம்முட்டேசன் பிடித்தம் செய்வதை 10 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். காசில்லா மருத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட பொருளாளர் பாபுராஜ் நன்றி கூறினார்.
