*3 ஏக்கரில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்
தர்மபுரி : தர்மபுரி புளிக்கு என்று தனியாக ரூ.11.30 கோடி மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த புளி வணிக மையம் விரைவில் 3 ஏக்கரில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புளி சாகுபடி செய்யப்பட்டாலும், தர்மபுரி மாவட்டத்தில் விளையும் புளி இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவை கொண்டதாகும். மாவட்டத்தில் வனப்பகுதி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், விவசாயிகளின் பட்டா நிலம் என மொத்தம் 4 ஆயிரம் ஏக்கரில் புளி சாகுபடி செய்யப்படுகிறது. மார்ச் முதல் மே மாதம் வரை புளி அறுவடை நடக்கும்.
அறுவடை செய்யப்படும் புளி ஓடு, விதை மற்றும் நார் நீக்கப்பட்டு மதிப்புக் கூட்டு புளியாக தயார் செய்யப்படுகிறது. மதிப்புக் கூட்டு புளியாக மாற்றும் பணியில் சவுளுப்பட்டி, சோகத்தூர், மதிகோண்பாளையம், பழைய தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமானோர் ஈடுபடுகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில், புளி சுத்தம் செய்தல், பதப்படுத்துதல் உள்ளிட்டவை குடிசை தொழிலாக நடந்து வருகிறது. இந்த பணிகளில் பெண்கள் தான் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். வீட்டு வேலைகளை செய்து கொண்டே புளி ஓடு நீக்குதல், விதை நீக்குதல், புளி பதப்படுத்தல் உள்ளிட்ட பணிகளில் பகுதிநேர வேலையாக பெண்கள் செய்து வருகின்றனர்.
மேலும், விவசாயிகளுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில், தரமான புளியை தயாரித்து விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் 20 சதவீத புளி விளைகிறது. 80 சதவீத புளி அண்டை மாநிலங்களில் கொள்முதல் செய்து சுத்தம் செய்து, பதப்படுத்தி அண்டை மாநிலத்திற்கே விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தென்னிந்தியா முழுவதும் புளி விற்பனைக்கு செல்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி தர்மபுரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், புளி வணிகர்கள் நலச்சங்கம் வைத்த கோரிக்கையை ஏற்று, ரூ.11 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தற்போது தர்மபுரி ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்க, செக்காரப்பட்டியில் 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்ப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க பூமி பூஜை நடைபெற உள்ளது.
இதுகுறித்து புளி வணிகர்கள் நலச்சங்க தலைவர் பச்சமுத்து பாஸ்கர் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் புளி கொள்முதல் செய்து, சுத்தம் செய்யும் பணிகளில் 20 ஆயிரம் குடும்பத்தைத் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணியில் 90 சதவீதம் பேர் பெண்கள் தான் ஈடுபடுகின்றனர்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில், ரூ.11.30 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்க, செக்காரப்பட்டியில் 3 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. சேலம் லீபஜாரில் 1919ம் ஆண்டு, புளி வணிகம் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 107 ஆண்டிற்கு பிறகு, தமிழகத்தில் தர்மபுரியில் தான் புளிக்கு என்று தனியாக புளி வணிக மையம் அமைக்கப்படுகிறது,’ என்றார்.
