கரூர், ஜன. 27: 72வது குடியரசு முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மலர்விழி தேசிய கொடி ஏற்றி வைத்து 109 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்கள் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் திருவள்ளுவர் மைதானத்திலும், கடந்த சில ஆண்டுகளாக கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்று வந்தது. தற்போது கொரனோ பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த சுதந்திர தினம் மற்றும் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா ஆகியவை கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் மலர்விழி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கலெக்டர் மலர்விழி, எஸ்பி பகலவன், டிஆர்ஓ ராஜேந்திரன் ஆகியோர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களை பறக்க விட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.