தர்மபுரி, ஜன.24: தர்மபுரி ராமக்காள் ஏரியில் சேதமடைந்துள்ள நடைபாதையை முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் நகர எல்லையில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 265 ஏக்கர் பரப்பளவில் ராமாக்காள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேரும். இங்கிருந்து வெளியேறும் உபரிநீர் சனத்குமார நதியில் கலந்து, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சேருகிறது. இந்த ஏரி முழுமையாக நிரம்பும்போது கடல்போல் காட்சியளிக்கும். தற்போது, சின்னாறு அணையில் இருந்து ராமாக்காள் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக ஏரி நிரம்பாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் பங்களிப்புடன் ஏரியில் பறவைகள் தங்கு வகையில் தீவு திடல் அமைக்கப்பட்டது.