‘பருத்திவீரன்’ படத்தில் இடம்பெற்ற ‘ஊரோரம் புளியமரம்’ பாடலை பாடிய லட்சுமி அம்மாள் திடீர் மரணம்

 

சென்னை: கடந்த 2007ல் அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடித்த ‘பருத்திவீரன்’ என்ற படத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்ற பாடல்கள் ‘ஊரோரம் புளியமரம்’, ‘டங்கா டுங்கா’. இதை பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள், உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த அவரது மறைவு கிராமிய கலைஞர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப்படங்களிலும், நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியிலும் புகழ்பெற்ற லட்சுமி அம்மாள், நாட்டுப்புற பாடல்களை பாடுவதற்காக, நுரையீரலில் இருந்து மூச்சுக்காற்றை எழுப்பி, உரத்த குரலில் அடிவயிற்றில் இருந்து கணீரென்று பாட வேண்டும்.

இதற்கு லட்சுமி அம்மாளின் உடல் ஒத்துழைக்கவில்லை. கடந்த 2016ல் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதால், லட்சுமி அம்மாளால் பாட முடியாத நிலை ஏற்பட்டது. முன்னதாக லட்சுமி அம்மாளும், நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மாளும் இணைந்து மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்பட தென்மாவட்டங்களுக்கு சென்று நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளனர். ‘பருத்திவீரன்’ படத்தில் பாடியிருந்த லட்சுமி அம்மாள், தொடர்ந்து 6 படங்களில் மட்டுமே பாடினார். அதற்கு மேல் உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், சிகிச்சைக்காக பணத்தை செலவு செய்து வறுமையில் வாடினார். இந்நிலையில் இன்று அவர் மரணம் அடைந்தார்.

20 வயதில் இருந்தே கும்மி பாட்டு, ஒப்பாரி, தாலாட்டு, தெம்மாங்கு, பக்தி, நாட்டுப்புற பாட்டு என்று கலக்கி வந்த லட்சுமி அம்மாளின் மறைவு நாட்டுப்புற கலையுலகிற்கு பேரிழப்பு என்று பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: