திரைப்பட வெளிநாட்டு உரிமை விவகாரம் தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் மீது செக் மோசடி வழக்கு: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மலேசிய நிறுவனம் தாக்கல்

சென்னை: ‘பேட்டை’ மற்றும் ‘காஞ்சனா-3’ படங்களில் வெளிநாட்டு உரிமை பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மறைந்த திரைப்பட இயக்குனர் ராமநாராயணின் மகனும் தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருமான முரளி பேட்டை மற்றும் காஞ்சனா-3 திரைப்படங்களில் வெளிநாட்டு உரிமைகளை பெற்றுத் தருவதாக மலேசியாவில் உள்ள மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

இதற்காக கடந்த 2018ம் ஆண்டு மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன் 30 கோடி ரூபாயை முரளிக்கு வழங்கி இருந்தது. ஆனால் ஒப்பந்ததின் படி இந்த இரண்டு படங்களின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷனுக்கு அவர் பெற்று தரவில்லை. இதைதொடர்ந்து, 15 கோடி ரூபாயை மட்டும் மலேசிய நிறுவனத்திற்கு முரளி திரும்ப அளித்திருந்தார்.

மீதத்தொகை திரும்ப செலுத்தாததை தொடர்ந்து, சென்னை மத்திய குற்ற பிரிவில் புகார் அளிக்கப்பட்டு முரளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், 10 கோடி ரூபாய்க்கான தலா ரூ.5 லட்சம் என இரண்டு காசோலைகளை மலேசியா நிறுவனத்திற்கு முரளி கொடுத்திருந்தார். இந்த காசோலை வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் திரும்ப வந்தது. இதையடுத்து முரளிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மலேசிய நிறுவம் செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: