உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து 5 ஆண்டுகள் புதுப்பித்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காத, படித்த இளைஞர்களுக்கு தமிழக அரசால் மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ₹200, மாற்றுத்திறனாளிகளாக இருப்பின் ₹600, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ₹300, மாற்றுத்திறனாளிகளுக்கு ₹600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ₹400, மாற்றுத் திறனாளிகளுக்கு ₹750, பட்டதாரிகளுக்கு ₹600, மாற்றுத்திறனாளிகளுக்கு ₹1000  வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை பெற https://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச் சான்று தேவையில்லை. விண்ணப்பதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை, தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை, உரிய இணைப்புகளுடன் சேர்த்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: