அரூர், ஜன.21: அரூர் அருகே, இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறிய உறவினர்கள், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி, போலீஸ் ஸ்டேஷன் முன்பு மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே காவாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி குமரேசன். இவரது மனைவி சாந்தகுமாரி (25). இவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாந்தகுமாரியிடம், வரதட்சணை கேட்டு குமரேசன், அவரது தாய் யசோதா உள்ளிட்ட உறவினர்கள் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சாந்தகுமாரி, நேற்று காலை விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார், அவரது உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.