சிவகங்கை, நவ.27: சிவகங்கை அருகே குமாரபட்டி கிராமத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டப் பகுதி, உப்பார் உபவடி நிலப்பகுதி விவசாயிகளுக்கு உழவர் வயல்வெளி பள்ளி பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குனர் செல்வி தலைமை வகித்தார். நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் தண்ணீரை சிக்கன படுத்தும் முறைகள், விவசாய விளைபொருளை மதிப்பு கூட்டும் முறைகள், விவசாயத்தில் ஏற்படும் செலவினை குறைத்து அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பது பற்றி கூறினார்கள்.
பின்னர் மண் ஆய்வக வேளாண்மை அலுவலர் பிரியா பொன் காயத்ரி, மண் மாதிரியின் முக்கியத்துவம், மண்வள அட்டையை பயன்படுத்தி உர நிர்வாக முறைகள் மற்றும் உழவன் செயலியை பற்றி விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இதனை தொடர்ந்து குமாரபட்டி பகுதி உதவி வேளாண் அலுவலர் பாண்டீஸ்வரன் அரசு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் இடுபொருள் மானிய விவரங்கள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்.
இதில் குமாரபட்டி கிராமத்தினை சேர்ந்த விவசாயிகள் அதிகாரிகளுடன் கலந்துரையாடி வேளாண் சம்பந்தமான சந்தேகங்களை நிவர்தி செய்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் ஞானபிரதா, உதவி தொழில்நுட்ப அலுவலர் ராஜா உள்ளிட்டோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
