பென்னாகரம், ஜன.7: பென்னாகரம் அருகே, அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, பிடிஓ அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு சாக்கடை கால்வாய் மூடிகள் உடைந்துள்ளதால், குழந்தைகள், முதியோர் மற்றும் வாகன ஓட்டிகள் என பல்வேறு தரப்பினர் சாக்கடையில் விழுந்து, விபத்தில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. அதேபோல், குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்துள்ளது. மேலும் 4 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே, குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால், குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. பெரும்பாலன மினி டேங்குகள் பழுதாகி காணப்படுகிறது. உயர்மின் கோபுர விளக்குகள் எரிவதே இல்லை. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் பாஸ்கரிடம் பலமுறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.