தர்மபுரி, டிச.28: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய திறனாய்வு தேர்வை, 18 மையங்களில் 2,154 மாணவ, மாணவிகள் எழுதினர். தர்மபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. 18 தேர்வு மையங்களில் 2154 மாணவ, மாணவிகள் எழுதினர். 80பேர் தேர்வு எழுதவரவில்லை. இத்தேர்வு காலை 9 மணி முதல் 11 மணிவரையும், 11.30 மணி முதல் 1.30 மணி வரையும் நடந்தது. கொரோனா நெறிமுறைகளுடன் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை, முதன்மை கல்வி அலுவலர் கீதா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கல்வி அதிகாரி சீனிவாசன், உதவி திட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்ட பறக்கும் படையினரும் அவ்வப்போது சோதனை நடத்தினர்.