தர்மபுரி, டிச.26: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கிறிஸ்தவர்கள் உரிய சமூக இடைவெளியுடன் பங்கேற்று, உலக மக்களின் நன்மைக்காக வேண்டிக் கொண்டனர். உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அன்னசாகரத்தில் உள்ள தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் நேற்று அதிகாலை சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. இதில் பங்கேற்ற கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.