கரூர், டிச. 22: கரூர் சுக்காலியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(29). இவர், இந்த பகுதியில் டயர் கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு நேற்று காலை வந்து பார்த்த போது, கடைக்குள் மர்ம நபர்கள் புகுந்து 40க்கும் மேற்பட்ட டயர்களை திருடிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜ்குமார், கடையில் வைக்கப்பட்டிருந்த 28 இரண்டு சக்கர வாகன டயர்கள், 9 கார் டயர்கள், 4 டிராக்டர் டயர்கள், 2 ஜேசிபி டயர்கள் உட்பட ரூ. 1லட்சத்து 72ஆயிரம் மதிப்புள்ள 49 டயர்களை காணவில்லை என புகாரில் தெரிவித்திருந்தார்.இந்த புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து கடை பூட்டை உடைத்து டயர்களை திருடிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.