அரூர், டிச.4: மொரப்பூர் அருகே அதிமுக நிர்வாகியை தாக்கிய, அமமுகவை சேர்ந்த மாஜி எம்எல்ஏ., முருகன் உள்ளிட்ட 8பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த தம்பிச்செட்டிப்படியை சேர்ந்தவர் இளவரசன். இவரது ஜூஸ் பேக்டரியின் சுற்றுச்சுவரில், அமமுகவினர் நேற்று சுவர் விளம்பரம் எழுதிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சென்ற அதிமுக கிளை செயலாளர் ஆறுமுகம்(62) மற்றும் கட்சியினர், நாங்கள் சுவர் விளம்பரம் எழுத இருந்த சுவரில், நீங்கள் ஏன் விளம்பரம் எழுதுகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை கண்ட இளவரசன் இருதரப்பினரையும், சுவர் விளம்பரம் எழுத வேண்டாம் என கூறியுள்ளார். இதையடுத்து, ஆறுமுகம் கட்சியினருடன் திரும்பி சென்று விட்டார்.