தர்மபுரி, பிப்.20: டெல்டா மாவட்டமான திருவாரூரில் இருந்து, ரயில் மூலம் தர்மபுரிக்கு நேற்று 2,200 மெட்ரிக் டன் நெல் வந்து இறங்கியது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளுர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பச்சரிசி உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வேண்டிய பச்சரிசிக்கான நெல், டெல்டா மாவட்டங்களில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் சரக்கு ரயில் மூலம், திருவாரூரில் இருந்து தர்மபுரி ரயில் நிலையத்திற்கு 58 வேகனில் 2,200 மெட்ரிக் டன் நெல் வந்தது. இவை நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் 70 ஆலைகள் மூலம் நெல் அரவை செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொரும் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் மாவட்ட வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை மூலம் அந்தந்த பகுதியில் ரேஷன் கடைகள் மூலம் வினியோகிக்கப்படும்,’ என்றனர். இதேபோல் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தர்மபுரி ரயில் நிலையத்துக்கு 2000 டன் சிமெண்ட் மூட்டைகள் நேற்று வந்து இறங்கியது. இந்த சிமெண்ட் மூட்டைகள் தனியார் முகவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.