தர்மபுரி, ஜன.29: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாலஜங்கமனஅள்ளியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியில், 6 முதல் 10ம் வகுப்பு வரை 131 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து 4 ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருகிறது. பள்ளி தலைமையாசிரியராக பெருமாள் பணியாற்றி வருகிறார். பள்ளி பரிமாற்றம் திட்டத்தின் கீழ் பாலஜங்கமனஅள்ளி பள்ளிக்கு, ஈச்சம்பட்டி அரசு பள்ளியில் இருந்து ஆசிரியைகள் உமா ரமணி, பூங்கொடி தலைமையில் 20 மாணவ, மாணவிகள் களப்பயணம் சென்றனர். அந்த மாணவர்கள் இப்பள்ளியில் உள்ள கற்றல் உத்திகள். ஆய்வகம், இயற்கை சூழல், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் பரிமாற்று பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினர். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு புதிய அனுபவம் கிடைத்தது.