அரவக்குறிச்சி. நவ. 13: அரவக்குறிச்சியிலிருந்து ஒத்தமாந்துறை வழியாக தென்னிலை வரை டவுன் பஸ் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரவக்குறிச்சி, பள்ளபட்டி ஆகிய ஊர்களில் இருந்து தற்போது கரூர், மூலனூர், கன்னிவாடி, தாராபுரம், ஈசநத்தம், கோவிலூர் என சற்றுதொலைதூரம் உள்ள ஊர்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அரவக்குறிச்சியிலிருந்து ஒத்தமாந்துறை வழியாக தென்னிலைக்கு டவுன் பஸ் வசதி இல்லை. அரவக்குறிச்சி, ஊத்தூர், மாலமேடு, தண்ணீர்பந்தல், அரிக்காரன்வலசு, கள்ளமடைப்புதூர் பிரிவு, பள்ளபட்டி பிரிவு, ஒத்தமாந்துறை சின்னத்தாராபுரம் தென்னிலை வழித்தடத்தில் இது வரையிலும் டவுன் பஸ் வசதி இல்லை.இதேபோல தென்னிலையில் இருந்தும் அரவக்குறிச்சி, பள்ளபட்டிக்கு மறு வழித்தடத்தில் எவ்வித டவுன் பஸ்சும் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் சற்றேறக்குறைய 3 கிலோமீட்டருக்கு ஒரு கிராமம் வீதம் 30 கிலோ மீட்டர் தொலைவுள்ள மேற்கண்ட வழித்தடங்களில் பகுதியிலிருந்து தினசரி பெயிண்டர்கள், கொத்தனார்கள் உள்ளிட்ட கூலி வேலை பார்ப்பவர்கள், மாணவ, மாணவிகள், ஒருசில மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கு செல்பவர் என ஏராளமானவர்கள் டவுன் பஸ் வசதி இல்லாத காரணத்தால் பெரும் பாதிப்பில் உள்ளனர்.