கரூர்: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை அரசு நடத்த வேண்டும் என்று கரூரில் தமாகா இளைஞரணி தலைவர் யுவராஜா கூறினார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, டெங்கு மற்றும் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டார். டெங்கு மற்றும் சாதாரண காய்ச்சல் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை தாமக இளைஞரணி தலைவர் யுவராஜா மற்றும் நிர்வாகிகள் டெங்கு மற்றும் காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து பிஸ்கட், பிரெட் போன்றவற்றை வழங்கினர். தொடர்ந்து யுவராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமாகா சார்பில் தமிழகம் முழுதும் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து உதவிகள் வழங்கி வருகிறோம். இதனடிப்படையில் கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டோம். அரசு மருத்துவமனைகளில் டெங்கு போன்ற காய்ச்சல்களுக்கு சிறப்பான முறையில் மருத்துவம் அளிக்கப்பட்டாலும், நிலவேம்பு கசாயம் வழங்குவதற்கும் அரசு சார்பில் முகாம் நடத்தப்பட வேண்டும். மருத்துவமனை பகுதிகள் மட்டுமின்றி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமினை துவங்கி நடத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.